Wednesday 9 August 2017

போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக்கிராம மக்கள் அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 31-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் சந்தித்து பேசினார். அப்போது கதிராமங்கலம் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும். உங்களுக்குஆதரவு தெரிவிக்க வருகிற 16-ந் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வருகை தர உள்ளார் என்றார்.அதே போல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்டு லெனினிஸ்ட்) மாவட்ட தலைவர் கண்ணையன் கலந்து கொண்டு பேசும் போது, கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடங்கும் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இங்கு பிரசாரம் செய்தோம்.அப்போது எங்களை விரட்டி அடித்தீர்கள். இன்று நாங்கள் கூறியது போல் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. உங்களுக்கு எப்போதும் பக்க பலமாக இருந்து விவசாயத்தையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம் என்றார்.போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கூறியதாவது:-மதுரை ஐகோர்ட்டில் தர்மராஜன், ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்காமல் காலதாமதம் ஆவதற்கு தர்மராஜன் பெயரை தர்மதுரை என்றும் ரமேஷ் பெயரை ராஜேஷ் என்றும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் எழுதி உள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்களிடம் கேட்டு பெயரை சரியாக எழுதி இருக்கலாம். அவசர, அவசரமாக பொய் வழக்கு போட்டதால் தான் பெயரை தவறாக எழுதி உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இத்தகைய தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓ.என்.ஜி.சி. கதிராமங்கலத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்கிறோம். எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும்.


No comments:

Post a Comment