Wednesday 9 August 2017

தொண்டர்கள் சூழ்ச்சியை முறியடிப்பார்கள் - எடப்பாடி

தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்- அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் நடந்தது.விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார். பிரதமர் இந்திராகாந்தி, மொரார்ஜிதேசாய், சரண்சிங் ஆகியோரை ஆதரித்தார். அப்போது எம்.ஜி.ஆரை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இது பற்றி பத்திரிகையாளர்கள் எம்.ஜி.ஆரிடம் கேட்டனர்.அதற்கு எம்.ஜி.ஆர்., நான் இப்போது தனிப்பட்ட நபர் அல்ல. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர். மக்களின் நலன்தான் எனக்கு முக்கியம். மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணக்கமான சூழலை கடைபிடிக்கின்றேன். எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.அந்தவகையில் எம்.ஜி.ஆரின் மனிதநேயமிக்க வழியைத்தான், அம்மாவின் வழியில் வந்த அம்மாவின் அரசும் கடைபிடிக்கிறது.நாட்டில் தேர்தல் நடத்துவதுபோல் காட்டிலும் விலங்குகளுக்கு யார் தலைவன் என தேர்தல் நடந்தது. பொதுவாக காட்டுக்கு சிங்கம்தான் தலைவனாக இருக்கும். ஆனால் புலி, தலைவன் பதவியை அடைய பல சூழ்ச்சிகளை கையாண்டது. அதற்காக நரியை அழைத்த புலி, நான் சிங்கம் கறியை ருசித்தது இல்லை. சிங்கத்தின் கறியை நீ எடுத்து வந்தால் நான் தலைவன் ஆகிவிடுவேன், நீதான் காட்டுக்கு ராஜா என்று புலி ஆசை கூறியது.அதை நம்பி நரி, யானையிடம் சென்று நீ பலசாலி, சிங்கத்தை எதிர்த்து தேர்தலில் நின்றால் நீதான் வெற்றிபெறுவாய் என்று கூறியது. மேலும் அந்த நரி, சிங்கத்திடம் சென்று உன்னை எதிர்த்து யானை தேர்தலில் நிற்கிறது என்று கூறியது. இதை கேட்ட சிங்கம், யானையை வரவழைத்து நடந்த விவரத்தை கேட்டது. அதற்கு யானை, நான் தேர்தலில் நிற்பது பற்றி சொல்லவில்லையே என்றது. நரியின் சூழ்ச்சியை தெரிந்து கொண்ட சிங்கம், காக்கையை அழைத்து நரிக்கு பரிசு வைத்திருப்பதாகவும், அதனை அழைத்து வருமாறும் கூறியது. அதன்படி பரிசு பெறுவதற்காக நரி ஓடி வந்தது. அப்போது சிங்கமும், யானையும் ஒன்றாக சகஜமாக இருந்ததை கண்டு நரி அச்சத்துடன் சென்றது. கடைசியில் புலி மற்றும் நரியின் சூழ்ச்சி பலிக்கவில்லை.
காட்டில் பல சூழ்ச்சிகள் நடைபெற்றதுபோல், நாட்டிலும் பலர் சூழ்ச்சி செய்கிறார்கள். ஒருபோதும் அவர்களது சூழ்ச்சி வெற்றிபெறாது. மற்றவர்கள் செய்யும் குழப்பத்தையும், சூழ்ச்சியையும் கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள்.


No comments:

Post a Comment